Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம்: தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் எஸ்.என்.ஜே மதுபான ஆலை தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழகத்தின் மது தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றுமளவு முக்கிய நிறுவனமாகத் திகழுகிறது
இந்த நிறுவனம் கேரளா, கோவா, மேற்கு வங்கம், ஒடிசா, பாண்டிச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உயர் ரக மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது.மதுபான தயாரிப்பு மட்டுமன்றி, லாட்டரி, சினிமா என பல தொழில்களையும் மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 150க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர் சி.ஐ.டி. காலனியில் உள்ள எஸ்.என்.ஜே நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு தொடர்பான தகவலின் பேரில் சோதனை நடைபெறுவதாவும், இது 2 நாட்கள் நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு மதுபானம் வினியோகிக்கும் ஒப்பந்ததாரர் என்பதால் வரி ஏய்ப்பு விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.